ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அரசு வேலை உரிமை தொடர்-8

திறன் பெற்றவர்களுக்கு வேலை, அதற்காக சிறப்புப் பயிற்சியினை அரசே வழங்க இருக்கிறது, என்பது சமீபத்திய செய்தி. வேலையில்லை என்பது இல்லை, மாறாக, வேலைக்கான திறன் பெற்றவர்கள் இல்லை, என்ற வாசகங்களையும், அவ்வப்போது காணமுடிகிறது. இந்த செய்திகளைப் படிக்கும் இளைஞனுக்கு, தனது திறன் குறித்த தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்க, இச்செய்திகள் உதவுமே அல்லாது, தன்னம்பிக்கையை வளர்க்க உதவாது. திறன் என்பது எதற்காக, யாருக்காக? என்பது நிறைய விவாதங்களுக்கானது. காரல் மார்க்ஸ், திறன் வாய்ந்த தொழிலாளி என்ற பொருளில் தான் விவாதிக்கிறார். “வாழ்நாள் முழுவதும் ஒரே சாமானிய வேலையைச் செய்வதற்கு வேண்டிய, தானியங்கி தன்மை வாய்ந்த தனித்தேர்ச்சி பெற்ற கருவியாக, தொழிலாளி தன்னை மாற்றிக் கொள்கிறார்”, என குறிப்பிடுகிறார். அதாவது தொழிலாளி வேலைகளைச் செய்து செய்து, திறன் பெற்றவராக மாறுகிறார், என்பதே இதன் பொருள். இந்த வரிகளை தனது மூலதனம் நூலில் மார்க்ஸ் குறிப்பிட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றைக்கும் இந்த வரிகளின் அமலாக்கத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆம் ஒரு தொழிலாளி திறன் குறித்த கோட்பாட்டு அறிவை கற்று தேர்ந்தாலும், அனுபவம் மிக அவசியம். அந்த வகையிலேயே, தொழிலாளி தன்னுடைய அனுபவம் காரணமாக, திறனை மேம்படுத்திக் கொள்கிறார்.

தற்போது வேலை நிறுத்தம் செய்து வரும், ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி, போன்ற தொழிற்சாலைகளில், பணியாற்றும் தொழிலாளர்களில் பலரும், 12, அல்லது 10 படித்து முடித்த இளைஞர்களே. இவர்கள் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்ததன் மூலமாக திறன் வாய்ந்தவர்களாக மாறினார்கள் என்பதே உண்மை. இதன் காரணமாகத் தான், அந்த நிறுவனங்களின், உற்பத்தி ஏற்கனவே இருந்ததை விடவும் அதிகரிக்கிறது. இதை மார்க்ஸ், மூலதனத்திற்கு எந்த செலவும் இல்லாமல், உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கான வழிவகையை முதலாளித்துவம் உருவாக்கிக் கொள்வதாக குறிப்பிடுகிறார். உற்பத்தி முறையில் இயந்திரம் அறிமுகப்படுத்தப் படும் போது, உழைப்பு பிரிவினை (செக்ஸன்) உருவாவதும் நடைபெறுகிறது. கூட்டு உழைப்பு பெருக்கம் அடைகிறது. எனவே மூலதனத்திற்கு செலவில்லாமல், கூட்டு உழைப்பு மற்றும் உழைப்புப் பிரிவினை காரணமாக, முதலாளிக்கான லாபம் அதிகரிக்கிறது என்பதை இன்றைய உழைப்பு சூழலில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய அனுபவங்கள் சுட்டிக்காட்டும் உண்மை, வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கு பதிலாக, லாபத்தைப் பெருக்கும், நோக்கத்துடன், இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது, என்பதாகும். காலம் காலமாக மனிதன் தனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்ற வகையில் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறான். 1990களுக்கு முந்தைய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் என்று அழைக்கப் படவில்லை என்றாலும், உலக பொருளாதரக் கொள்கையுடன் இனைந்தே, இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தீர்மாணிக்கப் பட்டது. அப்போதும் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. அன்றைக்கு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், போன்ற தொழில் கல்வி மீதான ஈர்ப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. ஒருசில தேவையும், வேலை வாய்ப்பில் இருந்தது. அலுவலகப் பணிகளுக்கு, தட்டச்சு, ஸ்டெனோக்ராஃப், ஆகிய தொழில் நுட்பம் அவசியம் என்பது வலியுறுத்தப் பட்டது.

1985க்குப் பின் அமலான புதிய பொருளாதாரக் கொள்கை, இன்னும் கூடுதல் இயந்திரங்களுடன் அணிவகுத்தது. விளைவு, பொறியியல் கல்லூரிகள் புற்றீசலைப் போல், பல்கிப் பெறுகியது. அத்தகைய தொழில் நுட்பக் கல்வித் தகுதி உடையோர் மட்டுமே, வேலை வாய்ப்பைப் பெற முடியும், என்ற புனைவுகளும் இனைந்தே கட்டவிழ்க்கப் பட்டது. குறிப்பாக கணிணித் துறையின் மீதான ஈர்ப்பு, மிக கவணமாக செதுக்கப் பட்டது. வேலைக்கான தகுதிகளாக இவை தீர்மானிக்கப் படும் நிலையில், மேற்படித் தனியார் வசம் விற்பனைப் பொருளாக இருந்த, தொழில் நுட்பக் கல்வியை, தொழிலாளி வர்க்க குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களால் பெற முடியாது போனது. எனவே நவீன வேலைவாய்ப்பில் இருந்து, உழைக்கும் வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒதுக்கி வைக்கப் பட்டனர். நடுத்தர வர்க்கம் மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தோர், உலகமயமாக்கப் பட்ட பொருளாதாரக் கொள்கை காலத்தில், பலனடைந்தோராக உருமாறியதையும் காண முடிந்தது. தொழிலாளி வர்க்க குடும்பத்தினர், திறனற்றவர்கள், என்ற முத்திரை குத்தப் படுவதற்கும், வடிகட்டப் படுவதற்கும் ஆளானார்கள்.

இரண்டு, புகுத்தப் பட்ட இயந்திரங்களைக் கண்காணிக்கும் அல்லது இயக்கும், மனித உழைப்பு சக்தி குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது என்பதாகும். உதாரணத்திற்கு, நவீனத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் தான், வேலை நேரம் காலவரம்பற்றதாக மாறி இருக்கிறது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வெற்றி பெற்ற, மே தினம் கொண்டாடத் துவங்கி, 124 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இந்திய திருநாட்டில், 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. குறிப்பாக இளம் தொழிலாளர்கள், அதுவும் பெண்கள் இத்தகைய கொடுமையை அனுபவிக்கின்றனர்.

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, ஒருபுறம், மனிதனின் உழைப்பு நேரத்தினை அதிகரிப்பதற்காகக் கூடுதலாகப் பயன்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு புறம், இருக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கவும் பயன்பட்டிருக்கிறது. இருக்கிற மனித வளத்தினைப் பயன் படுத்துவதன் மூலமே, ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்பட முடியும். ஆனால் அரசுகள், தனது முதலாளித்துவ வர்க்க நலனை பாதுகாப்பதற்காக, தீவிரத் தன்மையுடன் செயல் படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய பயணம், அரசுகளின் அனுகுமுறைக்கு மிகச் சிறந்த உதாரணம். ஒபாமா இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கவில், 53000 வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், என்ற உண்மை, நமது பாமர மக்கள் அறியாத ஒன்று. 2008ல் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம், தேக்க நிலையில் நீடிப்பதற்கு முக்கிய காரணம், அமெரிக்கவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பு அதிகரிக்காமல், வேலை வாய்ப்பு, பறிக்கப் பட்டதன் விளைவே ஆகும். மனித உழைப்பின் மூலமான, பொருளாதார சுழற்சி, தடைபடுகிற போது, உலகில் பெரும் பணக்கார நாடு என்றழைக்கப் படுகிற அமெரிக்காவே நிலைகுழைந்து உள்ளது என்பதை இந்திய ஆட்சியாளர்கள் கவணிக்க வேண்டும்.

இயந்திரத்தின் அவசியத்தை மறுப்பது, இக்கட்டுரையின் நோக்கமன்று. புதிய கண்டு பிடிப்புகள் தவிர்க்க இயலாது.; அதுவும் முதலாளித்துவத்தின், லாப வேட்கை அதிகரிக்கிற போது, இயந்திரமயமாக்கல் அதிகரிக்கவே செய்யும். லாபமற்ற, சுகாதரப் பராமரிப்பு பணிகளான, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுகள் அகற்றுதல் ஆகியவற்றில் ஏன், இயந்திரங்கள் அறிமுகம் செய்யப் படவில்லை? என்ற கேள்விக்கு முதலாளித்துவம் ஒரு போதும் பதில் சொல்லப் போவதில்லை. எந்திரன் திரைப்படத்தில், ரோபோவிற்கான கண்டுபிடிப்பை நியாயப்படுத்தும் போது, ராணுவத்தின் கடினமான பணிகளை ரோபோ கொண்டு இயக்கலாம், என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. இச்செய்தியை சினிமாவாக மட்டும் கவணிக்கும் எவரொருவரும், சிறந்த ஆலோசனை என்றே கருதுவர். செய்தியின் பொருளைக் கவணித்தால் இரண்டு நெறிப் பிறழ்வை விதைப்பது புரியும். ஒன்று ராணுவத்திலும் வேலைவாய்ப்பைப் பறிக்கும் விதத்தில், மனிதர்களைக் குறைத்து, இயந்திரங்களைப் புகுத்துவது. இரண்டு, மனிதன் கையாளும், போதே அணுகுண்டுகளின் அச்சுறுத்தல் இருக்கிறது. இயந்திரமயமாகி விட்டால், என்ன நடைபெறும், என்ற கேள்வி சார்ந்தது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை மனித நேயத்தை, சிறிது, சிறிதாக அழித்து வருகிறது, உதாரணம், நோக்கியா நிறுவனத்தில், மிகச் சமீபத்தில் நிகழ்ந்த விபத்து. அம்பிகா என்ற இளம் பெண், இரவுப் பணியின் போது, இயந்திரத்தில் சிக்கி கொண்டால். இயந்திரத்தை உடைத்தால், அப்பெண்ணை சில சேதாரத்துடன் உயிருடன் மீட்டிருக்கலாம். ஆனால் நிர்வாகம் இயந்திரத்தை உடைத்தால், நிர்வாகத்திற்கான இழப்பு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், இயந்திரத்தைக் காத்தது, உயிரைப் பறித்தது.

எனவே இப்போதைய தேவை திறன் மட்டுமல்ல. மனித மான்புகளைப் பாதுகாக்கும் கொள்கையும் தான். அப்போது தான் திறன் கொண்டோருக்கும் வேலை கொடுக்கும் கொள்கை உருவாகும். இல்லை என்றால் திறன் என்பதும், பேக்காரி கட்டவோ(வேலையின்மையே வெளியேறு), என்பது போல் வெற்று முழக்கமாகி விடும்.
(தொடரும்)

வெள்ளி, 3 டிசம்பர், 2010

குலத்தொழிலா அரசியல்?

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் புதல்வர் கொண்டாடிய, பிறந்த தின விழா, தனிப் பட்ட உரிமை சார்ந்தது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட ஊழியர்கள் அந்த விழாவிற்காக எடுத்துக் கொண்ட முயற்சி, பொது விவாதத்தை தூண்டுகிறது. இது போல் பலரும் கொண்டாடுகிறார்கள். எனவே வாரிசுகளின் அரசியல் குறித்து பல விதமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டும் வருகிறது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளைஞர்கள் பலரும் ”வாரிசுகள்” என்பதை தவிர, வேறு எந்த சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை. அரசியலின் பால் இளைஞர்கள் ஈர்க்கப் படாமல், அரசியல் மாற்றங்களோ, நேர்மைக்கான போராட்டத்திற்கோ, உருவம் காணமுடியாது. எனவே சமூகத்தின் எல்லாத் தரப்பு இளைஞர்களும், என்ற வரிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அரசியல் குறித்து நடுததர வர்க்கத்தினர் முகம் சுழிக்கின்றனர். சாதாரண குடும்பத்தை சார்ந்தோர், கல்லூரிக் கல்வி, போன்றவை கிடைக்காத காரணத்தால், அரசியலில் இருந்தாலும், பொறுப்புகளுக்கு வர இயலாதவர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் வாரிசு அரசியலின் தாக்கம் காரணமாக, இளம் தலைமுறை விவாதிக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருகிறது.

ராஜாஜி 1952 ல், தமிழக முதலமைச்சராக இருந்த போது குலக்கல்வித் திட்டத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எந்த நோக்கத்தில் அறிமுகம் செய்திருந்தாலும், அன்றைய எதிர்க் கட்சிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, எதிர்ப்புத் தெரிவித்தனர். மனிதன் செய்கிற தொழில்கள் சாதிய பிரிவினையையும், அதன் காரணமாக சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி வைத்தது. குலக்கல்வித் திட்டத்தின் மூலம், சாதிய அடையாளங்களைப் பள்ளிக் குழந்தைகள் பற்றி நிற்குமோ? ஏற்றத்தாழ்வுகளை நியாயப் படுத்தும் உணர்வு, குழந்தைகளிடம் வலுப்பெறுமோ? போன்ற கேள்விகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது.

மன்னரின் வாரிசு மன்னர், மந்திரியின் வாரிசு மந்திரி, படைத் தளபதியின் வாரிசு தளபதி, என்ற நடைமுறை மன்னராட்சி காலத்தில் பின்பற்றப்பட்டது. இன்று நாம் மக்களாட்சி காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மக்களாட்சியின் மகத்துவம் பலதரப்பட்ட மனிதர்களும் அரசியலில் பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதாகும். இந்திய சமூகத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் நீண்ட நெடும் காலமாக அரசியல் தலைமை பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களின் பங்கேற்கும் உரிமையை, உறுதி செய்யும் விதத்தில், தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறை, நமது நாட்டில் உருவாக்கப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், மகாத்மா காந்திக்கும், டாக்டர். அம்பேத்காருக்குமான விவாதங்களில், மிக முக்கியமானது இரட்டை வாக்குரிமை குறித்தது. இப்போது பெண்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிடும் நிலையை உருவாக்க, மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம், பொதுத் தளத்தில் தீவிரமடைந்துள்ளது. மேற்படி இரண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்ற ஜனநாயகத் தேவையில் இருந்து முன்வைக்கப் படுகிறது.

பொதுவாழ்வில் ஆட்சி செய்யும் உரிமையைப் பெறுதலும், ஆட்சி உரிமை பெற்று கட்மைகளைச் செலுத்துதலும் உள்ளடங்கிய செயல் பாடுகளே அரசியல் என வரையறை செய்யப் படுகிறது (the activities involved in getting and using power in public life is politics). இதில் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற முறையில் ஜனநாயகம், குடியரசு ஆகிய சொற்கள் பலம் பெற்றுள்ளன. அது மட்டுமல்ல, முந்தைய மன்னராட்சி இன்றைய மக்களாட்சியை விட பின்தங்கியது என விமர்சிக்கிறோம். காரணம் அன்று வாய்ப்பு சமமானதாக இல்லை என்பதாகும். இனக் குழுக்கள் என்ற நிலையில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், அதிகாரம் குழுத் தலைவனிடத்தில் மட்டும் இருந்ததில்லை. ஒரு கூட்டு குழுவினர் அதிகாரம் பொருந்தியதாக இருந்தனர், என்ற விவரத்தை மானுடவியலாளர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியாக இருக்கும் ஆனைமலையில் வசிக்கும் மலைமலசர், என்ற பழங்குடி மக்களின் குடியிருப்பை, ஒரு உதாரணமாக கொள்ளலாம். 30 குடும்பங்கள் வசிக்கும் அந்த குடியிருப்பை 5 பேர் கொண்ட குழு, நிர்வகிக்கிறது. ஒரே இனமாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள சந்ததி (lineage) அடிப்படையில், 5 பேர் கொண்ட குழு ஆரம்பத்தில் உருவாக்கப் பட்டது. இன்றும் அதே நடைமுறையை பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு, ஊர் பெரியவர்கள் என்ற மரியாதையைத் தவிர, தனியாக பிரத்யேக சலுகைகள் எதுவும் இல்லை. அரசியல் இயக்கங்கள் இப்பழங்குடி மக்களை அணுக இயலாத அல்லது இவர்களின் எண்ணிக்கை வாக்கு வங்கி கணக்கிற்கு உதவாது என்ற நிலையில், இம்மக்கள் தங்களின் பாரம்பரிய நிர்வாகத்தை இன்றளவும் பற்றி நிற்கிறார்கள். அதன் மூலம் தான் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளை எதிர்கொள்கின்றனர். இப் பழங்குடியினரின், இனக்குழு தலைமை, மன்னராட்சியை விட மேம்பட்ட அனுகுமுறையைக் கொண்டதாக தெரிகிறது. மன்னராட்சி முறையை, நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்துடன் இனைந்து எதிர்த்த காரணத்தால், விடுதலை இந்தியாவில், மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. பின்னர் மன்னர்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மான்யமும் ஒழிக்கப் பட்டது. இதை ஜனநாயகத்தின் வளர்ச்சி என்றே கருத வேண்டும்.

நாடு விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவுற்ற இன்றைய சூழலில், சிலர் அதே சந்ததி முறையை பின்பற்றினால், மக்கள், அரசியல் பங்கேற்பில் இருந்து தங்களை விலக்கிக் கொள்வதற்கு தூண்டப்படுகிறார்கள், என பொருள் கொள்ளப்படும். வாரிசு முறையில் அதிகாரம் செலுத்திய, மன்னராட்சி காலத்திலும் கூட, மன்னன் நிறை வேற்ற வேண்டிய கடமைகள் பல வரையறுக்கப் பட்டதாக கூறுகின்றனர். அத்தகைய வரையறைகளை, பற்றி ஒழுகாத மன்னன் மதிக்கப் பட்டதும் இல்லை, என்பதையும் சில வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறிகிறோம். வெ. சாமிநாத சர்மா இது குறித்து புராதான இந்தியாவில் அரசியல் எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். “நமது முன்னோர் வகுத்து வைத்துப் போயிருக்கிற, வாழ்க்கைத் திட்டத்தில், அரண்மனைகளாகட்டும், குடிசைகளாகட்டும், எவராக இருந்தாலும், அவர் பின்பற்ற வேண்டியவை என்பதில், கடமை தான் நுழை வாயிலாக இருந்திருக்கிறது”, எனக் கூறுகிறார்.

”அரசனுடைய காப்பாற்றும் கடமையானது திருடர், கயவர் ஆகியோரிடமிருந்து, மக்களை காப்பாற்றுகிற போலீஸ் வேலையைச் செய்து வருவது மட்டும் அல்ல. பசி, பிணி, அறியாமை, அநீதி, ஆகியவை இல்லாது மக்களைக் காக்க வேண்டும்”. மக்களுடைய புறவாழ்க்கைக்கு மட்டுமல்ல, அகவாழ்க்கைக்கும் அரசன் பொறுப்பாளி. அகவாழ்க்கையை பண்படுத்தவும், தூய நிலையில் வைத்திருக்க வேண்டியதும் அரசனின் கடமை”, என வரையறை செய்திருந்ததாக சாமிநாத சர்மா கூறுகிறார். மன்னர்கள் நிச்சயம் மேற்படி அனைத்தையும், பின்பற்றி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை பின்பற்றி இருந்தால், மன்னராட்சியை ஒழிக்கும் போது, பெரும் கழகத்தை, மக்கள் உருவாக்கி இருப்பார்கள்.

மன்னருக்கான வரையறை, இளவரசர்களுக்கும் பொருந்தும் என்றும், இளம் வயதிலேயே பயிற்சி பெறும் விதத்தில் அன்றைக்கு ஏற்பாடுகள் இருந்ததையும் படித்து அறிய முடிகிறது. ஆனாலும் இன்று நாம் வாழ்ந்து வரும் ஜனநாயக அமைப்பை விட, பின் தங்கிய நிர்வாக முறை என்ற கருத்து தான், மன்னராட்சி குறித்து நாம் அறிந்திருப்பது. இத்தகைய மன்னராட்சி முறையில் இருந்த உரிமைகளை விடவும், கூடுதல், உரிமைகளுடன், பங்கேற்புடன் அரசினை உருவாக்குகிற போது தான், மக்களாட்சி முறை வளர்ச்சி அடைந்த சமூகமாக மாறும். ஆனால் இன்றைய அரசியலில், அக்காலத்திய வாரிசு அரசியல் மேலோங்கி வருவதைப் பார்க்கிற போது, நம் சமூகம் பின்னோக்கி பயணிக்கிறதா? எனும் கேள்வி, தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

வாரிசுகளாக அறியப்படுபவர்கள் அரசியல் தளத்திற்கு வருகிற போதே, பிறந்த நாள் சுவரொட்டிகளுடனும், பிரமாண்டமான கட் அவுட்களுடனும் தான் பிரவேசிக்கிறார்கள். அல்லது அரசியலில் அமைச்சராக, நாடாளுமன்ற, சட்டமன்ற பொறுப்புகளில் இருந்து மறைந்த காரணத்தால், நடத்தப் படும் இடைத் தேர்தலின் போது, வேட்பாளராக அரசியல் பிரவேசம் அரங்கேற்றப் படுகிறது. அநேகமாக இடது சாரி அரசியல் இயக்கங்களைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் பின்பற்றப் பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அரங்கேறிவரும், குடும்ப அரசியல் திடீரென்று அதிகரித்துள்ளது. அதுவும் 1990க்குப் பின் தீவிர வேகம் பெற்று இருக்கிறது. குறிப்பாக சமூக நீதிக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்ட மாநில அரசியல் கட்சிகளிலும், மத்திய அமைச்சராக இருந்து வரும், முதல் தலைமுறை அரசியல் வாதிகளின் குடும்பங்களில் இருந்தும் வாரிசு அரசியல் தீவிரமாகவும் வெளிப்படுகிறது.

அரசியலில் பெரும் பொறுப்புகளில் இருப்போரின் செல்வமதிப்பு உயர்ந்து வருவதற்கும், அரசியல் வாரிசு கொள்கையின் வளர்ச்சிக்கும் நெருக்கம் இருக்கிறது. அதன் காரணமாகவே, 1990களுக்குப் பின், வாரிசுகளின் அணிவகுப்பு அரசியலில் அதிகரிக்கிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்னும், வந்த பின்னும் சேர்த்திருக்கும் சொத்து மதிப்புகள் குறித்து பகிரங்க விவாதங்கள் நடைபெறாமல், அரசியல் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. உறவினரின் நிழலும், செல்வாக்கும் தான் அரசியல் வாழ்க்கைக்கு மூலதனம் என்றால், அந்த பொது வாழ்க்கையின் நோக்கம், பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் உன்னத உணர்வின் வெளிப்பாடாக இருக்காது. அத்தகைய நபரிடம் கட்சி தொண்டர்கள் அல்லது சில தொழில் பிரமுகர்கள் சலுகைகளை எதிர்பார்த்தே உறவு நிலையை அமைத்துக் கொள்கின்றனர். இல்லை என்றால், கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பில் இல்லாத ஒருவரின் பிறந்த நாள், மிகப் பிரமாண்டமாக கொண்டாடப் பட்டிருக்குமா? வாரிசுகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என வாதிட விரும்பவில்லை. இளம் வயது துவங்கி, அரசியலில் ஈடுபடாமல், நேரடியாக, நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களாக வருவது அல்லது அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதும், சம்மந்தப் பட்ட கட்சியினரால் கேள்விக்கு உட்படுத்தப் பட வேண்டும். அத்தகைய கேள்விகளை எழுப்பப்படாத சூழல் கொண்ட கட்சிகளை, அரசியல் ஜனநாயகம் நிறைந்த அரசியல் இயக்கம் என ஏற்க இயலாது.

மருத்துவரின் வாரிசு மருத்துவர், பொறியாளரின் வாரிசு பொறியாளர், வழக்குரைஞரின் வாரிசு வழக்குரைஞர் ஆசிரியரின் வாரிசு ஆசிரியர் எனத் தொழில்கள் பரம்பரை சார்ந்ததாக, நம் சம காலத்தில் வளர்ந்து வருகிறது. தனக்குப் பின் தனது வாரிசு, தான் உருவாக்கி வைத்த செல்வத்தைப் பாதுகாக்கும், தேவையில் இருந்து, தனது வாரிசுகள் தன் தொழிலைப் பின்பற்றும் வகையில், வாரிசுகளின் கல்வியில் கவணம் செலுத்துகின்றனர். இதுவே ஒரு புதிய வேலைப் பிரிவினை அல்லது குலக்கல்வித் திட்டம் போல் செயல் படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவரின் வாரிசும், அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்படுவது, அரசியல் குலத்தொழில் என்பதை நோக்கி சென்றுவிடும். இப்போது பெற்று இருக்கிற சமூக நீதி, பெண்ணுரிமை, தனித்தொகுதி ஒதுக்கீடு போன்றவை, மெல்லப் புதைக்கப் படும், என்பதை ஜனநாயக் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி; தினமணி. நவம்பர். 25 2010