சனி, 14 மே, 2011

மே தினக் கொண்டாட்டத்தில் நேச சக்திகளின் தேவை

மே தினம் உலகத் தொழிலாளர்களின் திருவிழா. 125 வது மே தினத்தைத் தொழிலாளர் வர்க்கம் கொண்டாடத் துவங்கியுள்ளது. உலகில் மிக சமீபத்தில் நடந்த பல போராட்டங்கள், தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை பறை சாற்றுகிறது. சோவியத் யூனியன் சிதைந்ததற்குப் பின்னர், உலக அளவில் நடைபெற்றுள்ள இப்போராட்டங்கள், புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக அரபு மண்ணில் ஜனநாயகத்திற்காக உயர்ந்துள்ள போர்க் குரல்கள், தொழிலாளர் உரிமைகளுக்கும் பொருந்துவதாக அமையும். அரசியல் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வு கொண்டோரிடம், தொழிலாளர் உரிமைகளுக்கான குரல்களும் கூடுதலாக பிரதிபலிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய வாய்ப்புகள், உலகில் அரக்கத்தனமாக செயல் பட்டு வரும் மூலதனத்தைக் குறைந்த பட்ச கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

இப் பின்னனியில் இந்திய தொழிலாளர்களைத் திரட்டுவது, இடதுசாரி அரசியலுக்கு பெரும் கடமையாகவும், சவாலாகவும் இருக்கிறது. இந்திய மண்ணில் ஜனநாயகம் தலைத்திருந்தாலும், அவை, சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டது எனக் கருத இயலாது. வாக்களிப்பதுடன் தனது ஜனநாயகம் முடிந்து விட்டதாக மக்களும், வாக்களித்த பின் எதையும் மக்கள் எதிர் பார்க்கக் கூடாது, என முதலாளித்துவ அரசியல் தலைமையும் கருதுகின்றனர். இக்கருத்து இந்தியாவில் உள்ள ஜனநாயகம் முழுமையடைய வில்லை என்பதை, தெளிவுபடுத்துகிறது. முழுமையான ஜனநாயகத்திற்காக இடது சாரி அரசியல் மட்டுமே அரசியல் களத்தில் நின்று கொண்டிருப்பதைத் தொழிலாளி வர்க்கத்தின் கவணத்திற்கு எடுத்துச் செல்வது பிரதான பணி என்றால் மிகை அல்ல.

மே தினத்திற்கான போராட்டம் 1886 ல் 2.50 லட்சம் மக்கள் திரளுடன் சிக்காகோ வீதிகளில் ரத்தப் பலியுடன் வெற்றி பெற்ற போதிலும் கூட, இந்தியாவில் நாம் பின் தங்கியே இருக்கிறோம். 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு ஷிப்ட் இயங்கக் கூடாது என சட்டம் இருந்தாலும், அவைகள் மீறப்படுகின்றன. சமீபத்தில் சான்மினா எஸ்.சி.ஐ என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு ஷிப்டை 12 மணி நேரம் இயக்கிய குற்றத்திற்காக, சி.ஐ.டி.யு புகார் செய்ததன் விளைவு 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. 12 மணி நேரமாக இயக்குவதால், கிடைக்கும் அபரிமிதமான லாபம் காரணமாக, அபராதம் விதித்த பிறகும், தொடர்ந்து அதே தவறை நிறுவனம் செய்து வருகிறது. அரசும் அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கின்றனர். பி.ஒய்.டி என்ற தைவான் நிறுவனம் 12 மணி நேரம் கொண்ட ஷிப்டைச் செயல் படுத்தியமைக்காக, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது புரியாத ஒன்று. தங்கள் நாடுகளில் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாகத் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களைச் சுரண்ட இயலாத நிலை இருப்பதை, பன்னாட்டு பெரு முதலாளிகள் உணர்ந்துள்ளனர். எனவே தான், உழைப்புச் சுரண்டலுக்கு ஏற்ற, கேள்வி கேட்காமல் 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர் நிறைந்த இந்தியாவை நாடி பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. கொழுத்த லாபம் தேடி வரும் இது போன்ற முதலைகளிடம் தொழிலாளர் உரிமைகளை அரசோ, அதிகாரிகளோ பேசுவது இல்லை. மாறாக புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் சலுகைகள் கொடுப்பதையும், தொழிலாளர் சட்டங்களில் உள்ள தொழிலாளருக்கு சாதகமான அம்சங்களைப் பறித்துக் கொள்வதையும் செய்து வருகின்றனர்.

இன்று 12 அல்லது 14 மணி நேரம் வேலை செய்வதை கணிணிப் பொறியாளர் அல்லது மென் பொறியாளர்கள் போன்ற பணி செய்வோர், சட்ட விரோதமானது என்பதை அறிந்திருக்கவில்லை. படித்தவர்களே இப்படி இருக்கும் போது, படிக்காத பாமரத் தொழிலாளியின் நிலை கேட்க வேண்டியதில்லை. இன்றைய இளம் தலை முறைக்கு, மே தினக் கொண்டாட்டத்தின், வரலாற்றுப் பின்னனி தெரியவில்லை. பண்டிகைக்கான விடுமுறை தினங்களில் ஒன்றாகவும் கூட படித்த நபர்கள் கருதுவது வேதனையாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பணியில் இருப்போரின் உரிமைகளை விலை பேசுவதாக அமைந்து விட்டதும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப் பட்டதும், பிரதான காரணமாக அமைந்து விட்டது. இத்தகைய சவாலான சூழ்நிலையில் தான் மே தினத்தின் பாரம்பரியத்தை இடது சாரி அரசியல் கொண்டோர், பேச வேண்டியவர்களாக உள்ளனர்.

இடதுசாரி அரசியல் கொண்டோர் எனும் போது, தொழிற்சங்கத்தை மட்டும் குறிப்பதில்லை. 8 மணி நேர வேலைக்கான போராட்டம் என்பது, தொழிலாளர் பிரச்சனை என்ற போதும், அதில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம், அரசுகள் பின்பற்றுகிற கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் ஆகும். கார்ப்பரேட் முதலாளிகள் ஜனநாயகத்தைக் கூட விலை பேசுகிற காட்சிகளை ஊடகங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தின. அரசுகளை நிர்மானம் செய்யும் வலிமை கொண்டதாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், ஜனநாயகம் வலுவான பங்களிப்பைத் தொடர்ந்து செய்யும் என்று, எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் மேற்கு வங்க இடது முன்னனியின் ஆட்சியை மம்தாவைக் கொண்டு அகற்றும் கீழ்த்தரமான பணியை, இந்தியாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர். இச் செயல்கள் ஜனநாயகத்தை கைப்பற்ற நினைக்கும் ஏகாதிபத்திய அரசியலுடன் கைகோர்த்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்தது என்பதை உறுதியாக அறிய முடியும்.

இந்நிலையில் தொழிலாளர்கள் அரசியல் போராட்டங்களுக்கு தீவிர ஆதரவு தெரிவிப்பதும், தொழிலாளர்களுக்கு அரசியல் சக்திகள் தங்களின் பகிரங்கமான ஆதரவினை வெளிப்படுத்துவதும் அவசியம். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெற்று அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகள் நாம் எதிர்பார்க்கும் இப்பணியைச் செய்யப் போவதில்லை. ஆனால் இடது சாரி அரசியலை பின்பற்றுவோர், எப்போதும் இதைச் செய்து கொண்டுள்ளனர். காரல் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல், படித்த வேலை தேடும் இளம் தலைமுறை சேம நலப் படையைப் போல், வேலையில் இருப்போரைத் தாக்குவதற்காக ஆளும் வர்க்கத்தினரால் பயன்படுத்தப் படுகிறது. இதை மார்க்ஸ் 150 ஆண்டுகளுக்கு முன் விவாதித்திருந்தாலும், இன்று கண் கூடாக தொழிற்சங்கம் அனுபவித்து வரும் பிரச்சனை ஆகும். சி.ஐ.டி.யு வேலையில்லா இளைஞர்களின் கோரிக்கைகளை முன் வைப்பதன் மூலமே, ஆலைக்குள் இருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியும், என்ற முழக்கத்தை முன் வைத்து, பல போராட்டங்களை நடத்தியுள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு அப்பாற் பட்ட நேச சக்திகளின் ஒருங்கினைவும், அதற்கான முன்முயற்சியும் தொழிற்சங்கங்களின் சார்பில் மேற்கொள்வது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது.

ஐ.நா சபை வரைவு செய்த மனித வள மேம்பாடு அறிக்கையில் இந்தியா 2002 ல் 127 வது இடத்திலும் இப்போது 134வது இடத்திலும் என பின்னோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல், மனித வள மேம்பாட்டு அறிக்கையில் இந்தியா வளர்ந்து விடும் என எதிர் பார்ப்பது, மூடநம்பிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். இன்று சென்னை அதை சுற்றியுள்ள பகுதிகள் தொழிற் வளர்ச்சி பெற்றவையாக மாறி வருகின்றன. இதே நிலை 1800 ன் இறுதியிலும், 1900 ன் துவக்கத்திலும் இருந்தது. எனவே தொழில் வளர்ச்சி என்பது சென்னைக்கு புதிதல்ல. அன்று,தொழிற் சாலைகளில் விரும்பத்தக்க சூழல் இல்லை, உடல் நலம் கெடவும் விபத்துகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன. இயந்திரங்கள் மிகவும் நெருக்கமாகவும், வெளிச்சம் இன்றியும் இருந்தன. பஞ்சாலைகளில் மூக்கு, காது, வாய், வழியாக பஞ்சை உட்கொண்டு பல நோய்களுக்கு ஆளானவர்களாக தொழிலாளர்கள் இருந்தனர். சென்னை நகரம், செங்கல்பட்டு மாவட்டம் ஆகியவற்றில் அறிவிக்கப் பட்ட ஆலைவிபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இக்காரணங்கள் தொழிற்சங்க அமைப்புகள் மூலம் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய நிபந்தந்தைக் கொடுத்தது.என்று சென்னை பெரு நகர தொழிற் சங்க வரலாறை ஆய்வு செய்த, ஐ.ஐ.டியில் பேராசிரியராக பணியாற்றி மறைந்த வீரராகவன் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி வரலாற்றை படிக்கிற இன்றைய சென்னை அல்லது புறநகர் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளி, 110 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் தான் இருக்கிறோமா? என கேட்காமல் இருக்க மாட்டார். அன்று இருந்த தொழில்களும் தொழில் முதலாளிகளும் இன்று இல்லை. மாறி இருக்கிறார்கள். தொழிலாளர்களும் மாறி இருக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவ அனுகுமுறையில் கொள்கையில் மாற்றம் இல்லை. இன்று திருப் பெரும்புதூரில், நோக்கியா ஆலையில் நடந்த விபத்தில் அம்பிகா, போஸ் ஹூண்டாய் விபத்தில் தமிழ் செல்வன், மெப்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள பிரிஸில்லா ஷூ தயாரிக்கும் பேரூந்தின் விபத்தில் 17 வயது பெண் தொழிலாளி ஆகியவை கடந்த 3 மாத காலத்தில் நிகழ்தவை. ஹூண்டாய் ஆலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்தினால் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, ஆகியவை தொழிற் துறை நிர்வாக அனுகுமுறையில், எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

124 ஆண்டுகள் கடந்த மே தினப் போராட்டத்தின் வரலாறும், 110 ஆண்டுகளுக்கு முன் சென்னை தொழிலாளர்கள் நடத்திய பெருமை மிக்க போராட்ட வரலாறும் இன்றைய தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது மிக அவசியமாக இருக்கிறது. இளம் தொழிலாளர்களை ஆலைகளில் மட்டும் அல்லாமல், குடியிருக்கும் பகுதிகளிலும் அணி திரட்ட வேண்டியதன் அரசியல் தேவையை, தொழிற் சங்கங்களும், இடதுசாரி சிந்தனை கொண்ட வர்க்க, வெகுஜன அமைப்புகளும் தங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் மே தினம் சென்னையில் தான் முதல் முதலாக சிங்காரவேலர் முயற்சியில் கொண்டாடப் பட்டது. இப்பெருமையை தக்க வைக்கும் விதத்தில் தமிழகத் தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டத்தில், இது போன்ற புது முயற்சிகள் மூலம் முன் நிற்க வேண்டியுள்ளது. நிச்சயம் மே தினம் போன்ற உரிமைக்கான தினங்களின் வரலாறு புதியதாக எழுதப் படும்.

நன்றி: தீக்கதிர் மே 1


இன்னும் முடியாத முடியாட்சி !!

திருமணம் பெரும்பான்மையோரின் வாழ்வில் வந்து செல்லும் மிகவும் இனிமையான நிகழ்வு. சாதாரண குடிமகனுக்கு அது ஒரு நிகழ்வு மட்டுமே. பிரமுகர் குடும்பத்திற்கோ தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு. எனவே, பிரமாண்ட ஏற்பாடுகள் கூடுதலாகவும், பிரமுகர் மட்டுமே கலந்து கொள்ள முடியும், என்ற நிலையும் இருக்கும். அதுவும் உலகின் சொற்ப எண்ணிக்கையிலான பிரமுகர்களுக்கு தான் அழைப்பு என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்படி ஒரு திருமணமாக வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இளவரசர் வில்லியமின் திருமணத்தைக் கண்டுகளிக்க பல லட்சம் மக்கள் குவிந்தனர் என்பது உலகம் முழுவதும் பிரதான செய்தி. குளிரையும் பொருட்படுத்தாது, வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயம் முன் மக்கள் காத்துக் கிடந்தனர். இவை உலகின் பெரும் ஊடகங்கள் என அழைக்கப் படும் பி.பி.சி உள்ளிட்ட நிறுவனங்களால் ஒளி மற்றும் ஒலி பரப்பப் பட்டவை. பி.பி.சி எடுத்த வீடியோ காட்சிகள் மூன்று மணி நேரத்திற்கு தொகுக்கப் பட்டு, சந்தை வர்த்தகத்தில், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுடச்சுட ஓடிக்கொண்டிருக்கிறதாம். 15 முதல் 25 பவுண்டுகள் ( 1305 ரூ முதல் 2175 ரூ வரை ) விலை தீர்மாணிக்கப் பட்டு இருப்பதையும், இதன் மூலம் கிடக்கும் தொகை, வில்லியம் மற்றும் அவர் சகோதரர் ஹாரி பெயரில் அமைந்துள்ள ஃபவுண்டேசனுக்கு போய்ச் சேரும் என்றும் ஊடகங்கள் செய்திகளாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? நீண்ட இடைவெளிக்குப் பின் மகாராணியின் குடும்பத்தில் நடைபெறும் திருமணம் என்பதனாலா? மன்னர் வீட்டு வைபவம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காரணமா? போன்ற கேள்விகள் முன்னெழுந்துள்ளன. இக் கேள்விகள் நியாயமானவையே. ஏனென்றால், வில்லியம் அல்லது கேத் மிடில்டன் ஆகியோர், இதுவரை தனிப்பட்ட முறையில் எந்த ஒரு சாதனையையும் நிகழ்த்தியதாக அறிய முடியவில்லை. எனவே அவர்களின் திருமணம் உலக செய்தியானது, அவர்களின் குடும்ப பின்னனி காரணமாகத் தான் என்ற முடிவுக்கு எளிதில் வரமுடியும். பொதுவாக ஒரு குடும்பத்தின் செல்வாக்கு இரண்டு வகைகளில் இருக்கலாம். ஒன்று பெற்றோர் அல்லது அவர்களுக்கும் முன்னோடிகள், அந்த தேசத்திற்காக ஏதாவது பெரும் தியாகத்தை செய்திருக்க வேண்டும். இரண்டு, அவர் தம் பெற்றோரின் அதிகாரம் கோலோச்சுவதாக இருக்க வேண்டும். இங்கு நாம் விவாதிக்கும் வில்லியமின் திருமணத்திற்கான படாடோபங்கள், இரண்டாவது வகைப்பட்டது. முன்னோர்களின் பெருமை, இன்றைய தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்குமானால், முன்னோர்கள் செய்திட்ட தீயவைகளைச் சுட்டிக்காட்டி, அக்குடும்பத்தின் இன்றைய நிகழ்வுகளை விமர்சிப்பதற்கும் இடமிருக்கிறது, என்ற தர்க்கத்தின் அடிப்படையிலேயே, மேற்படித் திருமணத்தின் மீது சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

முதலில், பெரும் தியாகத்தை ராணி எலிசபெத் குடும்பம் செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. அவர்களின் ஆட்சி நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக படை வீரர்களும், மக்களும் தியாகம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை, நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் கி.பி 400ம் ஆண்டு முதல் 1900ன் துவக்கம் வரை 1500 ஆண்டுகள், எலிசபெத் அம்மையாரின் குடும்பத்தினர் தான், இங்கிலாந்து தேசத்தின் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக கவணித்து வந்துள்ளனர். மன்னராட்சி நிலை நிறுத்தப் பட, மக்கள் தான் அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்களே ஒழிய, மன்னர்களின் வாரிசுகளோ உடமைகளோ, எந்த இடத்திலும் பறிபோனதாக அறிய முடியவில்லை. இரண்டாவதாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது, இன்றைக்கும், பக்கிங்காம் அரண்மனையின் அதிகாரம் கோலோச்சுவதை பல்வேறு இடங்களில், இங்கிலாந்து அரசு நடவடிக்கைகளின் மூலமாக, நேரடியாகப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, பக்கிங்காம் அரண்மனைக்கு என தனிக் கொடி இன்றும் பறந்து கொண்டிருக்கிறது. இந்த கொடிக்கு கீழ் தான் பிரிட்டிஷ் குடியாட்சியின் ஜாக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், அரண்மனைக்கு கீழ் தான், குடியாட்சி இருந்து கொண்டிருக்கிறது, என்ற அதிகார வெளிப்பாட்டின் வடிவம் என்பதாகும்.

மூன்றாவதாக, காமன் வெல்த் நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கு தலைவராக, பிரிட்டிஷ் மன்னர்களின் வாரிசு இருந்து வருகிறார். 53 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றது. காமன் வெல்த் அமைப்பிற்குத் தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்றாலும், இந்த அமைப்பின் செயல்பாடு, தங்கள் நாடு மீது, பக்கிங்காம் அரண்மனையை சார்ந்த வாரிசுகளின் ஒடுக்கு முறையை, சுரண்டலை, வளங்களை வாரிச் சென்றதை, இன்றைய தலைமுறையிடம் மறைக்கச் செய்வதற்கானதாக உள்ளது. இந்தியாவில் இருந்து, தனது வர்த்தக நோக்கத்திற்காக, பருத்தி, அவுரி உள்ளிட்ட பணப் பயிர்களை விளைவித்து, அதை இங்கிலாந்து கொண்டு சென்றனர். உதாரணத்திற்கு, 1859 ல், 50 ஆயிரம் பேல்கள் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு அனுப்பப் பட்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் இருந்த இந்தியாவை, விக்டோரியா மகாராணி தனது நேரடி நேரடி நிர்வாகத்திற்கு மாற்றிக் கொண்ட காலம் அது. அதிலிருந்து 5 ஆண்டுகளில், அதாவது 1864ல் 14 லட்சம் பேல்களாக உயர்ந்தது. விளைவு, உணவு உற்பத்தியில் சரிவும், பணப் பயிர் விளைச்சல் அதிகரிக்கவும் செய்தது. அதன் மூலம் இந்தியாவில் மிகக் கொடிய உணவுப் பஞ்சம் உருவானதை மறந்து விட முடியுமா?

இக்காலத்தில் பல கோடி இந்தியர்கள் மாண்டு போனதை, எழுத்தாளர்கள் நிறையவே பதிவு செய்துள்ளனர். முதலில் மக்கள் பிச்சை எடுத்தார்கள், யார் பிச்சை போடுவது? வண்டியை விற்றார்கள், மாட்டை விற்றார்கள், நிலத்தையும் விற்றார்கள், தங்கள் பெண்குழந்தைகளை விற்றார்கள், தொடர்ந்து குழந்தைகளையும், மனைவிகளையும் வாங்குவதற்கு யாரும் இல்லை. மரங்களுக்கு மேலேயும், அடியிலும் வாழ்ந்தார்கள். நாய்களையும், பூனைகளையும், எலிகளையும் சாப்பிட்டார்கள். பலர் எங்கோ மறைந்து போனார்கள். எஞ்சியவர்கள், பசியாலும், நோயாலும், லட்சக் கணக்கில் மாண்டு போனார்கள். இப்படி பங்கிம் சந்திர சட்டோபாத்தியாவின் ஆனந்த மடம் நாவல் சித்தரிக்கிறது. இந்தியாவில் மட்டும் இது போன்ற அபகரிப்புகள் நிகழந்துள்ளது என்றால், 53 நாடுகளை, அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ரானியின் குடும்ப செல்வ வள உயர்வுக்கு, வேறென்ன வேண்டும்.

17 ம் நூற்றாண்டில், வெனிஸ் நகரவாசி, மனெளச்சி என்பவர், இந்தியாவின் செல்வ வளத்தை, பல நாடுகளுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறார். பஞ்சாடை, சில்க், சக்கரை, அவுரி, ஆகியவை எகிப்தை விட உயர்ந்தது என்பதை இன்றைய இந்தியா புத்தகத்தில், ரஜினி பாமிதத் பதிவு செய்திருக்கிறார். இதிலிருந்து இரண்டு விவரங்கள் தெளிவாகிறது. ஒன்று, இந்தியாவில் கிடைத்த விலைமதிப்பு மிக்க, செல்வங்களை மட்டுமல்ல, விளைபொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு, இந்தியாவில் மட்டுமல்ல, எகிப்து போன்ற நாடுகளிலும் இத்தகைய வளங்களை எடுத்துச் சென்றுள்ளனர், என்பதாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னனியில் இருந்தே, வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் திருமண நிகழ்வு மற்றும் ஒளிபரப்புகளை கவணிக்க வேண்டியுள்ளது.

நான்காவதாக, ஐரோப்பா கண்டத்தில் தொழிற் புரட்சி நடைபெற்று, முதலாளித்துவ ஜனநாயகம் தலையெடுத்த நாடுகளில் பிரதானமானது, பிரிட்டிஷ் அரசு, என கற்பிக்கப் பட்டு இருக்கிறோம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலப்பிரபுத்துவ முறையை கைவிட்டு, முதலாளித்துவ முறையை நோக்கி சென்ற ஒரு நாட்டில், திறனில்லாத விவசாயிகளை விடவும், தொழில் திறன் கொண்ட தொழிலாளர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப் பட்டுள்ளனர். இதற்கான கல்வி போதனைகளும் துவங்கப் பட்டுள்ளன. அத்தகைய ஒரு சமூகத்தில், அரச குடும்ப திருமணத்தை காண பல லட்சம் மக்கள், அழைக்கப் படாமலேயே காத்திருந்தனர், என்ற செய்தி அதிர்ச்சி அளிக்காமல் எப்படி இருக்க முடியும். அத் திருமணத்தை வழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகளைப் போல் முன்னிறுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது. தனி நபர் புகழ் பாடுவதில், இந்தியத் துணைக் கண்டத்தினரை விடவும், இங்கிலாந்து முன்னேறி நிற்கிறது, என்றுதானே பொருள் கொள்ள முடியும். இத்தகைய முன் உதாரணங்களின் தாக்கமாக, இந்தியாவில், வாரிசு அரசியல் தலையெடுப்பதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும், நிகழ்கிறதோ, என்ற எண்ணம் உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பு முறை, நீதிமன்ற செயல் பாடுகள் போன்றவை இன்றைக்கும் பிரிட்டிஷ் நாட்டினைப் பின்பற்றியே வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சில மாற்றங்களை இந்தியாவில் செய்ய முடிந்துள்ளது. இந்தியா விடுதலை பெறுகிற போது, 500க்கும் அதிகமான மன்னர்கள் இருந்தனர், எனக் கேள்விப்படுகிறோம். சுதந்திர இந்தியா, மிகத் துணிச்சலுடன், அவர்களின் அதிகாரத்தைப் பறித்து குடியாட்சியை, நிலை நாட்டியது. மறுத்தவர்கள் மண்டியிடும் சூழலையும் அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். 64 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியாவில் வசித்த மக்கள், இன்று போல் ஜனநாயகக் கருத்துகளின் மீதான எண்ணம் கொண்டோராக இல்லை. இருந்தபோதும் மன்னர்களின் ஆட்சிமுறைக்கு, முடிவு காண அரசு செயல் பட்ட போது, மக்கள் மன்னர்களுக்குப் பின் அணிவகுக்கவில்லை என்பது, முக்க்கியச் செய்தி. பின்னர் மன்னர் மான்யமும் ஒழிக்கப் பட்டது. அன்றைய நிலையில் இது போன்ற நடவடிக்கைகள், ஜனநாயகத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உறுதியாக்குவதற்குப் பயன்பட்டது.

இந்தியாவில் மேற்கொள்ள முடிந்த நடவடிக்கைகளை, ஏன் இங்கிலாந்தில் மேற்கொள்ள முடியவில்லை. ராணி எலிசபெத்தின் குடும்பம் இந்திய குறு நில மன்னர்களை விடவும், அதிகாரம் கொண்ட பேரரச குடும்பமாக இருந்தது என்பதனால், பிரிட்டிஷ் மக்களாட்சியால், எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியவில்லை. நமது நாட்டை விட முன்னேறிய சமூகம் என சொல்லப் படுகிற, பிரிட்டனில் ஜனநாயக மாண்புகளும் உயர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லை. அது போன்ற நிலை இல்லாமல், ஒருவரின் திருமணத்தை, வினோதமான ஒன்றாக மாற்றும் வலிமையோடு ராணியின் அதிகாரம் இருப்பதை, ஜனநாயக சக்திகள் விவாதிக்காமல் எப்படி இருக்க முடியும். இந்த நிலையில் இங்கிலாந்து மக்கள் இருக்கிறார்கள், என்றால், இங்கிலாந்து மக்களின் விழிப்புணர்வு பின் தங்கி இருக்கிறது, என்று புரிந்து கொள்வதைத் தவிர வழியில்லை.

வில்லியம் தம்பதிகளின் திருமணம், தொலைக்காட்சி சீரியல் போன்ற ஒன்று, என பொது மக்கள் கருதும் வேளையில், இப்படி ஒரு சீரிய விவாதம் தேவையா?, என்று சிலர் கேட்கலாம். மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவு படுத்திக் கொண்டே இருப்பது, வரலாற்று ஆசிரியரின் கடமை, என்ற வரலாற்று ஆய்வாளர் எரிக் ஹாப்ஸ்வாமின் வரிகளை நினைவில் நிறுத்தி வாழ்த்துவோம் வில்லியம் தம்பதியினரை.