புதன், 22 மார்ச், 2017

பகத்சிங் நினைவு தினம்


வரலாற்றில் மாற்றப்பட வேண்டிய அடையாளம்!!

இந்திய விடுதலைப் போரில், 20 ம் நூற்றாண்டு துவக்கத்தில், அகிம்சைவழி, ஆயுதவழி என இரண்டு கருத்தாக்கங்களுக்கு இடையே சர்ச்சை இருந்து வந்தது. காந்திக்கு முன் கோகலே போன்றோர் அகிம்சாவழிப் போராட்டங்கள் சரி எனக் கூறினாலும், காந்தியே அகிம்சாவழியின் அடையாளமாக முன் நிறுத்தப்பட்டார். அதேபோல், ஆயுதம் தாங்கி போராடுவது, என்ற வழியை பகத்சிங் மற்றும் அவர் தோழர்களுக்கு முன், யுகாந்தர், அனுசீலன் சமிதி, கத்தார் இயக்கம் என பல அமைப்புகள் செயல்படுத்தியிருந்தாலும், வீரமான போராட்டத்தின் நாயகனாக, பகத்சிங்கும் அவருடைய தோழர்களுமே அடையாளம் காணப்பட்டனர்.

போராட்ட வழி அகிம்சையா? ஆயுதவழியா? என வேறுபட்டாலும், இந்தியா அரசியல் ரீதியாக விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒத்த கருத்துடன் இருந்தனர். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். காந்தி கிராமப்புற முன்னேற்றம் தற்சார்பு, என்ற வரிகள் மூலம் தனது கொள்கையை முன் நிறுத்தினார். பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் சோசலிசம் என்ற கொள்கை மூலம், முன்னேற்றத்திற்கான பிரகடனத்தை வெளியிட்டார்.

இன்றைய இந்தியா இந்த இரண்டு வழிகளையுமே பின்பற்றவில்லை. மாறாக அன்றைய காலனியாதிக்க ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்த, அதே கொள்கையை, நவீன தாராளமயமாக்கல் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றனர். எனவே வரலாற்று நாயகர்கள் நினைக்கப்படுவதும், அவர்களின் கொள்கை குறித்து விவாதிப்பதும், தொடர்ந்து தேவையாக உள்ளது.

வாழ்க்கையை அர்பணித்த இளைஞர்கள்:

பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், தங்களது 23 மற்றும் 24 வயதுகளில் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. நீதிபதியின் உத்தரவுப் படி, 24 மார்ச்  காலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் 1931 ம் ஆண்டு நாடு முழுவதும் இருந்த கொதிநிலையும், காந்தி தனது செல்வாக்கினால், இர்வின் மூலமாக தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மக்களின் முழக்கமும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நடுக்கமுறச் செய்தது. எனவே 12 மணிநேரத்திற்கு முன்னதாக, 23 மார்ச் மாலை 7.35 மணிக்கு, தண்டனையை நிறைவேற்றியதுடன், எரித்து சாம்பலாகவும் மாற்றி விட்டது, பிரிட்டிஷாரின் காவல் துறை.

அந்த அளவிற்கு அச்சம் பிரிட்டிஷாரிடம் இருந்தது. காரணம் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில், நடத்திய அரசியல் போராட்டங்கள், மக்களிடம் பேசு பொருளாக இருந்தது. சிறையில் அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரி, தோழர்களுடன் சிறையில் 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதில் யதீந்திரநாத் தாஸ் உயிரிழந்தார். அவர் உடலை கொல்கத்தாவில் பெற்றுக் கொள்வதற்காக, சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் லட்சத்திற்கும் அதிகமானோர், கூடினர், என்பது முக்கியச் செய்தி.

சிவவர்மா தான் எழுதிய நூலின் முகப்புரையில், " லாகூர் மத்திய சிறைச்சாலையில், சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கிய ஒரு வாரத்திற்குள்ளேயே, உயிர்பலி தராமல் பிரிட்டிஷ் அரசு எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்காது என்பது தெரிந்து விட்டது. எங்களில் யார் முதலில் சாவது என்ற போட்டி துவங்கி விட்டது. அதில் யதீந்திரநாத் வெற்றி பெற்றார். அதேபோல் அந்தமான் சிறையில் மகாவீர்சிங் தன்னுயிர் நீத்தார்", என பதிவு செய்துள்ளார். இப்படி போராட்ட நாயகர்களாக மட்டுமல்ல. நீதிமன்றங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காது, எனத் தெரிந்தும், மக்கள் மத்தியில் கருத்துக்கள் செல்ல வேண்டும் என்பதற்காக, நீதிமன்றத்தில் வாதாடி, மக்கள் மனதைக் கவர்ந்தவர்கள். எனவே தான் பிரிட்டிஷார் நடுங்கினர்.

தனிநபர் செல்வாக்கை எல்லா வகையிலும் உயர்த்திக் கொள்ளும் அரசியல் பிரவேசம், அணிவகுக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பகத்சிங், மற்றும் அவர் தோழர்களின் வாழ்க்கை, நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் உரிமைக்காகவும், உயிரை துச்சமென கருதி செயல்பட்டுள்ளனர், என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது.

இன்றைய பொருத்தப்பாடு:

தற்கால அரசியலில், எங்கு பார்த்தாலும் சந்தர்ப்பவாதமும், பதவியும் புகழும் பெற கோஷ்டிசண்டைகள், தனது நெருங்கிய நன்பர்களையே பின்னுக்குத் தள்ளி தான் முன்னேற வேண்டும் என்ற தீவிரம், கொள்கைகளின் பெயரால் கொள்கையற்ற தன்மை, கோஷ்டிகள் சேர்ப்பது, செயற்கைத் தன்மை, வெளிவேஷம், நடிப்பு, ஏமாற்று வித்தை இவற்றை எல்லாம் பார்க்கும் போது, நான் இந்த துறையில் வெற்றி பெற முடியாது எனத் தோன்றுகிறது. இந்த வரிகள் இன்றைய தமிழக நிலையை மனதில் கொண்டு, எழுதியது போல் உள்ளது. ஆனால் இவை 35 ஆண்டுகளுக்கு முன், பகத்சிங் மற்றும் அவர் தோழர்களுடன் சிறையில் இருந்த விடுதலைப் போராட்ட வீரர் சிவவர்மாவால், பகத்சிங் குறித்த தொகுப்பை இறுதி செய்த போது எழுதப்பட்டவை.

பகத்சிங் ஒரு சோசலிச பொருளாதாரக் கொள்கையின் மீது பற்றுக் கொண்ட இயக்கவாதி. அதோடு அவர் ஒரு தலைசிறந்த அறிவுஜீவியாகவும் வாழ்ந்திருக்கிறார். தனது செயல், கொள்கையில் இருந்து வெளிப்படுவது, அந்த கொள்கை அறிவியல் ரீதியானது, என்பதை வெளிப்படையாக 20 வயதில் பேசமுடிந்துள்ளது. இது உலக அரசியல் தலைவர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டாலும், அதியசயத் தக்க ஒன்றே ஆகும். கடவுளுக்கும் கொடுங்கோலன் நீரோவுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி அவ்வளவு எளிதானது அல்ல. மனிதர்களைப்படைக்காமல் இருக்கும் சக்தி அவரிடம் இருக்கும் போது துன்பத்தில் உளழும் மனிதர்களை ஏன் படைத்தார்? இன்று துன்பம் அனுபவிப்பவர் செத்தபின் சொர்க்கத்திற்கும், இன்று கொடுமை செய்து செல்வம் சேர்ப்போர் செத்த பின் நரகத்திற்கும் செல்வர் என்பது, இன்றைய வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டாம், இப்படியே வாழ்ந்து விடலாம், என உடன்பட்டு விடுவதற்கான உபதேசம் ஆகும். இதுபோன்ற வியாக்கியானங்களை, பகத்சிங்கும் அவரின் தோழர்களும் நிகழ்த்தி இருப்பது, சிறந்த சமூகத்தினைப் படைக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்து தோன்றியதே.

பதிப்பாளர் சா. தேவதாஸ், தனது பதிப்புரையில், பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? எனும் நூல் தமிழகத்தில் மட்டுமே கிடைத்தது, என கூறியுள்ளார். அதேபோல் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட போது, தூத்துக்குடி, மதுரை, சென்னை மாணவர்கள் போராட்டம் மூலம், தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். அந்த அளவிற்கு நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்திய இளம் தலைவர்கள் ஆவர்.

ஆனால் தமிழகத்தில் இன்று ஆன்மாவுடன் பேசி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து வருகின்றனர். இது குறித்த நம்பிக்கை உணர்வை, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் உருவாக்கி வருகின்றனர். கட்சியின் தொண்டர்கள் என்பதற்காக பணியாற்ற அழைப்பு விடுப்பது, கொள்கை அளவில் தோற்றுப்போன காரணத்தால், அதைவிடவும் கீழ் நோக்கி அவர்களை அமிழ்த்துவதே அரசியலாகப் பாதுகாக்கப்படுகிறது.

கேள்விக்குள்ளாகும் தேசபக்தியும் - வழக்குகளும்:

பிரிட்டிஷ் ஆட்சியில், பொதுக்கூட்டங்கள், பல்வேறு கண்டன இயக்கங்கள் தடை விதிக்கப்பட்டன. மேலும் அவ்வாறு நடத்தியவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிறைய சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மீது, பிரிட்டிஷ் அரசு கான்பூர் சதிவழக்கு, பெஷாவர் சதிவழக்கு, மீரட் சதிவழக்கு மற்றும் தமிழகத்தில் நெல்லை சதிவழக்கு ஆகியவை பதிவு செய்யப்பட்டது. அதேபோல், பகத்சிங் சார்ந்த இயக்கம் காகோரி சதிவழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைச் சந்தித்தனர். காலனியாதிக்கம் தனது செல்வசுரண்டலை மேற்கொள்ள, இத்தகைய அடக்கு முறை தேவையாக இருந்தது.

பகத்சிங் தன் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்திய போது, "நான் பயங்கரவாதி அல்ல. ஒருவேளை எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாள்களைத் தவிர, நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை. பயங்கரவாதத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேனின் வரலாற்றில் இருந்து ஒருவர் இதை எளிதாகத் தீர்மானிக்கலாம்", என கூறியுள்ளார். அதாவது 17 வயதில் சிந்தித்து சரியான பாதையை, தீர்மானித்த அறிவுஜீவியாக பகத்சிங் விளங்கியது, வரலாற்றில் முன் நிறுத்தப்படவில்லை, என்பது ஒருவகையில் இருட்டடிப்பே.

இன்று பயங்கரவாதம் என்ற பெயரில் மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக விமர்சனக் கூட்டங்கள் நடத்தும் அறிவுஜீவிகள் மற்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தேசதுரோகம் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை காலனியாதிக்க அரசு இருந்த நாடுகளில், பின்பற்றப்பட்ட கொள்கை ஆகும். எனவே பயங்கரவாதம் குறித்த விவாதம், ஜனநாயகத்தை மேம்படுத்தும் அடிப்படையிலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும், நடத்தப் பட வேண்டியுள்ளது.

சிறையில் பகத்சிங் எழுதிய குறிப்புகள், நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அன்றைய காலத்தில் கொடிய அடக்குமுறை இருந்த சிறைச்சாலையில், பகத்சிங் 151 புத்தகங்களை படித்து குறிப்பெழுதியதும், 4 சிறு பிரசுரங்களை எழுதியதும், எளிதில் கடந்து போகிற செய்தியாக இருக்க முடியுமா? தூக்கு தண்டனை கைதியாக, சாவுக்கான நாள் குறிக்கப் பட்ட மனநிலையில், அமைதியாக நூல்களை வாசிக்க முடிந்தது எப்படி? என்ற தன்மையில் ஏன் விவாதிக்கப் படவில்லை. விவாதிக்கப்படாததன் நோக்கமே பகத்சிங் ஒரு பயங்கரவாதி என்ற முத்திரையில் அடையாளப்படுத்தப் பட்டதே. இந்த அடையாளம் பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு, 86 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள காலத்திலாவது, மாற்றப்பட வேண்டும்.